தீவிரமாக போராடினால்தான் வெற்றி கிட்டும்: பரத்

கடந்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமா நிறைய மாற்றங்களை எதிர்கொண்டுள்ளதாகச் சொல்கிறார் நடிகர் பரத்.

ஐந்து பாடல்கள், நான்கு சண்டைக்காட்சிகள் என்று பழைய பாணியில் உருவாகும் படைப்புகளை ரசிகர்கள் இப்போது விரும்புவதில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு என்ன மாதிரியான படங்களில் நடித்தால், எதிர்பார்க்கும் வசூல் கிடைக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும்.

“அதனால்தான் படம் வெளியாகி 75 நாள்கள் கடந்த பிறகும் அந்தப் படங்களை விளம்பரப்படுத்தி சுவரொட்டிகளை அச்சிடவும் சாலையோரச் சுவர்களில் ஒட்டவும் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர்.

“ஆனால் இப்போதேல்லாம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் எந்தப்படம் வரவேற்கப்படும் என்பதையும் கணிக்க முடியவில்லை,” என்று சொல்லும் பரத், திரையுலகில் நடிக்கத் தொடங்கி 21 ஆண்டுகளாகி விட்டன.

தற்போது ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (‘once upon a time in Madras’) என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுபோக, இயக்குநர்கள் வசந்தபாலன், முத்தையா ஆகியோரின் படங்களும் கைவசம் உள்ளனவாம்.

‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படத்தை பிரசாத் முருகன் இயக்குகிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக சுவாரசியமாக சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு திசைகளில் பயணித்து இறுதியில் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு புள்ளியில் இணைவதாகவும் சொல்கிறார்.

அஞ்சலி நாயர், அபிராமி, பவித்ரா லட்சுமி, தீக்ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கதைப்படி இதில் ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார் பரத்.

“இது திகில் படமாக உருவாகி உள்ளது. எனவே இசைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ‘நெடுநெல்வாடை’ படத்துக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் எங்களுடன் இணைந்துள்ளார்.

“ஒரு காலகட்டத்தில் நிறைய பேய்க் கதைகள் உருவாகின. அவற்றில் நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வந்தன. ஆனால் எந்தக் கதையும் கதாபாத்திரமும் எனக்கேற்றாற்போல் அமையவில்லை. அதனால் அவற்றில் நடிக்க விரும்பவில்லை.

“அதன் பின்னர் தேடி வந்த சில கதைகளில் எனக்கு ஒத்துப்போகும் படங்களை மட்டும் ஏற்றுக்கொண்டேன். எனது பலம் என்ன என்பது எனக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.

“எப்படிப்பட்ட படங்களை ரசிகர்கள் விரும்புவார்கள் என ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன். அந்த அனுபவம் இப்போது கைகொடுக்கிறது. ‘எம்டன் மகன்’ போன்ற குடும்பக் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

“அண்மையில் வெளிவந்த ‘காளிதாஸ்’ படம்கூட ஒருவகையில் குடும்பக் கதைதான்,” என்று விகடன் ஊடகப்பேட்டியில் பரத் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலங்களில் தனக்கு நடனக்காட்சிகள் அமையவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இப்போதெல்லாம் ரஜினி, விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் மட்டுமே நடனக்காட்சிகள் இடம்பெறுவதாக சொல்கிறார் பரத்.

“எனக்கும் ஒரு படத்திலாவது நடனமாட வேண்டும் என்று ஆசை உள்ளது. ஒரு பாடல் காட்சியாவது நடனத்துடன் அமைக்கலாம் என்று இயக்குநர்களிடம் வெளிப்படையாகக் கேட்டிருக்கிறேன்.

“ஆனால் பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைத்துவிடும் என்று காரணம் சொல்லி என் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது,” என்று புலம்புகிறார் பரத்.

தெலுங்குத் திரையுலகில் இப்போதும்கூட பாட்டுக்கும் நடனத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ‘புஷ்பா’ படத்தில் கதையும் பாட்டும் சரிவிகிதமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார்.

“அதனால்தான் அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. பாடல்களும் நடனக் காட்சிகளும்தான் படம் பார்க்கும் ரசிகர்கள் மனதை லேசாக்கும். அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

“நான் நடித்த சில படங்கள் வெற்றி பெறாதது தொடக்கக் காலத்தில் வேதனை அளித்தது. அதே சமயம் சில படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது, உற்சாகம் அளித்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

“போராட்டத்திற்கு இடையேதான் வெற்றி கிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். ஒவ்வொரு வெற்றி, தோல்வியையும் படிப்பினையாக எடுத்துக்கொண்டேன். இடையில் மூன்று ஆண்டுகள் நான் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் வாழ்க்கை வலி மிகுந்ததாக மாறிப்போனது.

“அனைத்தையும் கடந்து இப்போதும் நல்ல படங்களுக்கான எனது தேடல் நீடிக்கிறது. நான் படித்து, வளர்ந்த இடம் சென்னை என்பதால் மற்ற இடங்களைவிட சென்னையே மிகவும் பிடிக்கும்.

“இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ போன்ற ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்,” என்கிறார் பரத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!