தமிழில் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படத்தில் நடித்து பிரபலமானவர் அபிராமி. மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர், ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், திரைத்துறையில் நடிகைகள் ஒரு சிலர் உருவக்கேலியை எதிர்கொள்வதாகக் கூறி வருவதுபோல், தனக்கும் இந்தக் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அபிராமி கூறும்போது, “உடல்ரீதியாக நானும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டேன். எனது உயரத்தை வைத்துக் கேலி செய்தனர். நீ மிகவும் உயரமாக இருப்பதால் தான் படவாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் போய்விட்டது,” என்றனர்.
“உனது தாடை நீளமாக உள்ளதாகக் கூறி தாடையைப் பிடித்து இழுத்து இழுத்து கேலிசெய்தனர். இது கூட என் தாடை நீளமாக காரணமாக இருக்கலாம். திரையில் நடிப்பது போல் எனக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. சட்டென்று பொலபொலவென அழுதுவிடுவேன்,” என்று கூறியுள்ளார்.