தமக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு குறித்து பொது வெளியில் பேச அறவே விரும்பியதில்லை என்கிறார் நடிகை சமந்தா.
எனினும் கட்டாயத்தின் பேரில் தாம் ‘மயோசிடிஸ்’ பாதிப்பு குறித்து வெளிப்படையாகப் பேச நேர்ந்தது என்று ‘இந்தியா டுடே’ ஊடகப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேச நினைத்தபோது தான் பெண்களை முன்னிலைப்படுத்தி நான் நடித்திருந்த திரைப்படம் வெளியீடு காண இருந்தது. இதேபோல் நான்கைந்து படங்கள் எனக்காகக் காத்திருந்தன.
“ஆனால் உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டேன். அந்த காலகட்டம் கடினமானதாக இருந்தது. அதை எதிர்கொள்ள நான் தயாராக இல்லை என்பதே உண்மை.
“என்னைப் பற்றி எல்லாவிதமான யூகங்களும் வலம் வந்தன. மேலும், என்னைப் பற்றியும் எனது உடல்நிலை குறித்தும் தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டன.
“ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விளம்பரப்படுத்த சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு எனது பங்களிப்பும் தேவைப்பட்டது. அத்தகைய முயற்சிகள் இல்லையெனில் சில படங்கள் திரை கண்டிருக்காது,” என பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.
வெளிப்படையாகச் சொல்வதானால் தாம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதே உண்மை என்று கூறியுள்ள அவர், தம்மை நிலையாக வைத்திருக்க அதிக அளவு மருந்துகள் தேவைப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். இதனால் மக்களுக்கு என் மீது அனுதாபம் ஏற்பட்டது. என்னை ‘அனுதாப ராணி’ என்று அழைத்தனர்.
“ஒரு நடிகையாக, ஒரு பெண்ணாக எனது பயணம் மிக நீண்ட தூரத்தைக் கடந்துள்ளது. திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் நான் ஆர்வமாக இருந்தேன்.
“மோசமான கட்டுரைகளையும் என்னைப் பற்றி என்ன எழுதப்படுகிறது என்பதையும் இணையத்தில் தேடிப் பிடித்து படித்தேன்.
“மக்கள் என்னைக் குற்றஞ்சாட்டுவது அதிகரித்தது. என்னுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கும் வகையில் நானே கேள்வி கேட்கத் தொடங்கினேன்.
“நான் பெருமைப்படக்கூடிய நபராக மாற அவர்கள் என்னை கட்டாயப்படுத்தியுள்ளனர். மக்கள் மிகுந்த வலியை அனுபவிக்கும் போது, அதை வெளிப்படுத்த அவர்களுக்கு ஒரு வழி தேவைப்படுகிறது. சமூக ஊடகங்கள் அதற்கு உதவுவதாக அறிகிறேன்.
“எனது தொழில் வாழ்க்கை உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அந்த மகிழ்ச்சியை என்னால் அனுபவிக்க முடியவில்லை,” என்கிறார் சமந்தா.
இவர் கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது இணையத்தொடர் ஒன்றில் நடித்து வருகிறாராம். இதில் வருண் தவான் நாயகனாக நடிக்கிறார்.
சமந்தா தனது ஊடகப் பேட்டியில் விரிவாகவும் உண்மைத் தகவல்களுடனும் பேசி இருப்பதாக அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அவரது வார்த்தைகள் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
அதேசமயம் மற்றொரு தரப்பினரும் உடல்நலம் பாதிக்கப்பட்ட தொடக்க நிலையிலேயே சமந்தா தனக்கு ஏற்பட்ட நிலைகுறித்து வெளிப்படையாகப் பேசி இருக்க வேண்டும் என்றும் இது காலம் கடந்து வெளிவந்துள்ள பேட்டி என்றும் கூறுகின்றனர்.
“தொடக்க காலத்தில் என்னைப் பற்றி பல மோசமான கட்டுரைகள் எழுதப்பட்டன. அவற்றை எல்லாம் தேடிப்பிடித்து படித்தேன். அதன் மூலம் என்னை அதிகமானோர் குற்றம்சாட்டி உள்ளனர் என்பது தெரியவந்தது.
“ஒவ்வொரு தருணத்திலும் என்னை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். எனினும் இறுதியில் அவர்களின் கட்டாயம் காரணமாக என்னை நினைத்து நானே பெருமைப்படக்கூடிய அளவுக்கு அவர்கள் என்னை மாற்றிவிட்டனர். கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட நல்ல விளைவு இது,” என்று சமந்தா கூறியுள்ளார்.