வடிவேலைப் பற்றி குறைகூறுவோர் பட்டியலில் நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் இணைந்துள்ளார்.
நடிகை கோவை சரளாவுக்கும் தமக்கும் ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது வடிவேலு அதைத் தடுத்துவிட்டார் என்பதுதான் ஆர்த்தியின் புகார்.
அண்மைய பேட்டி ஒன்றில் அவர் இது குறித்து மனம் திறந்துள்ளார். தன்னைவிட யாரும் நன்றாக நடித்துவிடக் கூடாது என்பதில் வடிவேலு மிகக் கவனமாக இருப்பார் என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
“ஒரு படத்தில் நடிக்கும்போது வடிவேலு திடீரென அழைத்து, ‘அந்தக் காட்சியில் நீங்கள் நன்றாக நடித்திருக்கிறீர்கள்’ என்று பாராட்டினால் அக்குறிப்பிட்ட காட்சி படத்தில் இடம்பெறாது என்று அர்த்தம்.
“இப்படித்தான் ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படத்திற்காக கோவை சரளாவையும் என்னையும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடிக்க இயக்குநர் சிம்புதேவன் ஒப்பந்தம் செய்திருந்தார்.
“ஆனால் இதையறிந்த வடிவேலு, அந்த கதாபாத்திரங்களில் இருந்து இருவரையும் நீக்குமாறு இயக்குநரிடம் கூறிவிட்டார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.’
“இத்தனைக்கும் வடிவேலுடன் ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளார் கோவை சரளா. அவருக்கே இதுதான் நிலைமையா என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்,” என்று தனது பேட்டியில் ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
‘கிரி’, ‘கச்சேரி’, ‘வில்’ ஆகிய படங்களில் வடிவேலுடன் ஆர்த்தியும் இணைந்து நடித்துள்ளார். வடிவேலு குறித்து ஏற்கெனவே சில நகைச்சுவை நடிகர்கள் பல்வேறு புகார்களை எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக, அண்மையில் காலமான போண்டா மணி, முத்துக்காளை உள்ளிட்டோர் கொரோனா காலகட்டத்தில் வடிவேலு தங்களுக்கு எந்தவிதமான உதவியையும் செய்யவில்லை என புலம்பியிருந்தனர்.