திரைப்பட விழாக்களில் பங்கேற்காத நடிகர், நடிகையர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இயக்குநர் பேரரசு வலியுறுத்தி உள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ‘சிக்லெட்ஸ்’ படத்தின் இசை, முன்னோட்டக் காட்சித்தொகுப்பின் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது திரைத்துறையைச் சார்ந்த இத்தகைய விழாக்களில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையர் பங்கேற்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
“ஒரு திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் ஊதியத்தின் ஒரு பகுதியை தயாரிப் பாளர்கள் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
“இசை, முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியீட்டு விழாக்களில் அவர்கள் கலந்துகொண்ட பிறகே அவர்களுடைய ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும். இதை ஓர் ஆலோசனையாக முன்வைக்கிறேன்,” என்றார் பேரரசு.
‘சிக்லெட்ஸ்’ திரைப்படத்தை எம்.முத்து இயக்கியுள்ளார். பாலமுரளி இசையமைத்துள்ளார்.
“இன்றைய நவீன உலகில் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.
“பெற்றோர் தங்களுக்காக எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும்.
“எனவே இந்தப்படத்தை பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டும். அதேபோல் இளையதலைமுறையினரும் படத்தைப் பார்த்து ரசித்து பெற்றோரின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார் பேரரசு.
இந்தப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியீடு காண உள்ளது.