சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் திரையரங்கில் ஓடிக்கொண்டுள்ளது.
தமிழகத் திரையரங்குகளில் குவிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், ஆர்வத்துடன் படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர். படத்தின் வி.எப்.எக்ஸ். காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு நிகராக உள்ளதாகவும் அவர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடுவது போன்ற புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தனது குடும்பத்தினர் நடுவே ‘அயலான்’ படத்தின் ஏலியன் நிற்பது போன்ற காட்சியை இணைத்து வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் தனது பதிவில், “இம்முறை நாங்கள் ‘அயலான்’ பொங்கல் கொண்டாடினோம். அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் பரவி வருகிறது.