தணிக்கைக்குழு அனுமதி வழங்கிய பின்னர் ஒரு திரைப்படத்தை ஓடிடி தளத்தில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கு நல்லதல்ல என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
நயன்தாரா நடிப்பில், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ‘அன்னபூரணி’ படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியானது. பின்னர் டிசம்பர் 21ஆம் தேதி முன்னணி ஓடிடி தளத்தில் இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட்டனர்.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து ஓடிடி தளத்தில் இருந்து இந்தப்படம் நீக்கப்பட்டது. இதற்கு வெற்றிமாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தணிக்கைக்குழு அனுமதி வழங்கிய பின்னர் ஒரு படத்திற்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்று அவர் கூறியுள்ளார்.
“இத்தகைய போக்கு திரைத்துறைக்கு நல்லதல்ல. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும், மறுப்பதற்கும் தணிக்கைக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
“எனவே இத்தகைய நிகழ்வுகள் தணிக்கை குழுவின் அதிகாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும்,” என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.