‘அன்னபூரணி’ படத்தில் சர்ச்சையான வசனங்களைப் பேசியதால் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் நெட்பிளிக்ஸ் படத்தை நீக்கியுள்ளது.
நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்தில் “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமரும் லட்சுமணனும் விலங்குகளை வேட்டையாடி சீதாவுடன் சேர்ந்து உண்டனர்,” என்று நயன்தாரா பேசியிருப்பார்.
இந்த வசனத்தால் ‘அன்னபூரணி’ படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த இந்து அமைப்பின் இணையப் பிரிவினர், இப்படத்தில் ராமர் குறித்து அவதூறாகப் பேசியது மட்டுமல்லாமல் லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து, இப்படத்தின் மீதும் நடிகை நயன்தாரா மற்றும் ஜெய் மீதும் மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும், இப்படத்தை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனத்தையும் புறக்கணிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்ததால், நெட்பிளிக்ஸ் அன்னபூரணி படத்தை தளத்திலிருந்து நீக்கியுள்ளது. சர்ச்சையான கருத்துள்ள பல படங்கள் ஓடிடியில் இருந்தாலும் ராமர் குறித்த ஒரு தகவலுக்காக நெட்பிளிக்ஸ் அன்னபூரணி படத்தை நீக்கியது சரியல்ல என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.