சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ’புறநானூறு’ படத்திற்கு முழு வீச்சில் தயாராகிறார் சூர்யா.
அவர் தற்போது நடித்து வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து தொழில்நுட்பப் பணிகள் தொடங்கி உள்ளன.
முன்பே படமாக்கப்பட்ட சில காட்சிகளில் சிறு திருத்தங்களைச் செய்ய வேண்டியுள்ளதாம். அதற்காக மூன்று நாள்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்தப்படுமாம். தமிழகத்தில் எதிர்வரும் கோடை விடுமுறைக்குள் படத்தை வெளியிட வேண்டும் என்ற முடிவுடன் படக்குழுவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் ’சூரரைப்போற்று’ படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கும் ’புறநானூறு’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சூர்யா. இது 1950 முதல் 1965 வரை நடக்கும் கதையாம்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் இது. அதனால் அவர் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்.
மதுரைதான் கதைக்களம் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பல புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளனர். பிப்ரவரி முதல் வாரத்தில் ‘புறநானூறு’ படப்பிடிப்பு துவங்கக்கூடும். அதற்காக தன் உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளாராம் சூர்யா. இதற்கிடையே இந்தியிலும் நடிக்கத் தீர்மானித்துள்ள சூர்யா, பாலிவுட் முன்னணி இயக்குநர் ஒருவருடன் கைகோத்து உள்ளதாக தகவல்.