சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். எனவே முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்த பாகத்துக்கான காட்சிகளையும் படமாக்கத் தொடங்கிவிட்டனர்.
படத்தில் நிறைய காட்சிகளுக்கு நவீன கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளனர். அக்காட்சிகள் எதிர்பார்த்தபடி அமைந்துவிட்டால் ஏப்ரல் மாதத்தில் ‘கங்குவா’ வெளியாகக்கூடும்.
காட்சிகள் மனநிறைவு தராவிட்டால், மேலும் பொறுமையாகச் செயல்பட்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்றால் அதற்கும் தயாராக இருப்பதாக சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.