தமிழில் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் இளம் நாயகி பவ்யா திரிகா.
தமிழில் ’கதிர்’, ’ஜோ’, ’ஜின்’, ’13’, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். சமந்தாவைப்போல் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் இவரது கனவாம்.
வசிப்பது சென்னையில் என்றாலும், இவரது குடும்பத்தார் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பவ்யா படிப்பில் நாட்டமுள்ளவராம். பள்ளிப்படிப்பை சமர்த்தாக முடித்த பின்னர் மின்னிலக்க சந்தைப்படுத்தல் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து, அதன் மூலம் நடிகையானது எல்லாம் பொதுவாக மற்ற பல நடிகைகளிடம் நாம் கேள்விப்பட்டதுதான்.
“சமந்தா எந்தவிதப் பின்புலமும் இல்லாமல் திரை உலகிற்கு வந்தவர். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சமாளித்து வெற்றிபெற்ற கதாநாயகி. அவர் இத்தனை நாள்கள் திரை உலகில் தாக்குப் பிடித்து நிற்பதே பெரிய சாதனை என்பேன்,” என்று சொல்லும் பவ்யாவிற்கு சிறுவயது முதலே நடிகையாக வேண்டும் என்ற கனவு இருந்ததாம்.
குடும்பத்தார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் இவரது தந்தை மட்டும் மகளின் முடிவுக்கு உறுதுணையாக நின்றாராம்.
“‘பல தமிழ்திரைப்படங்களைப் பார்த்து திரைத்துறை சார்ந்த பலவற்றைக் கற்றுக் கொண்டேன். நான் பார்த்த ஒவ்வொரு திரைப்படமும் என்னை ஒரு நடிகையாகவே வார்த்தெடுத்ததாகக் கூறலாம். எப்படியோ இன்று நடிகையாக ரசிகர்கள் முன் நிற்கிறேன்,” என்று அண்மையில் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பவ்யா.
சினிமாவில் நடிக்க வேண்டும் நல்ல கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்ற தேடலில் ஈடுபட்டிருந்த வேளையில்தான் ’கதிர்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்ததாம்.
அந்தப் படத்தை முடித்த கையோடு மீண்டும் கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார். ஆனால் உடன் படித்த தோழிகள் பவ்யாவை விடுவதாக இல்லை. நன்றாக நடிப்பதாகச் சொல்லி ஊக்கமளித்துள்ளனர். அந்நேரம் பார்த்து, ’ஜோ’ பட வாய்ப்பு தேடி வந்ததாம். அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார்.
“இந்தப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்துமே மகிழ்ச்சிகரமானவை. அவை என்றென்றும் என் மனதில் பதிந்திருக்கும்.
“வெற்றி என்பது ஒரு சராசரி நடிகையை எந்த அளவுக்கு மாற்றி அமைக்கும் என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது. அதற்கு நானே சிறந்த உதாரணம்.
“இன்று நான் எங்கு சென்றாலும், எனக்குரிய அங்கீகாரத்தை ரசிகர்கள் அளிக்கிறார்கள். என்னைப் பற்றி பாராட்டி பேசுகிறார்கள். ’ஜோ’ திரைப்படம் எனக்கு கொடுத்துள்ள அங்கீகாரத்தையும் புகழையும் மனதில் வைத்திருந்து நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்,” என்கிறார் பவ்யா.
இந்தப் புத்தாண்டில் தமிழ் ரசிகர்களிடம் நல்ல நடிகை என்று பெயர் எடுப்பதுதான் இவரது முதல் இலக்காம். இதைச் சாதிக்க நடிகை சமந்தாதான் தமக்கு முன்மாதிரி என்கிறார்.
“சமந்தா எத்தனையோ சோதனைகளையும் சவால்களையும் சந்தித்துள்ளார். இது சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும். எனவேதான் அவரது வழியில் நடைபோட முடிவு செய்துள்ளேன்.’
“தற்போது தமிழ், கன்னட மொழிகளில் நடித்து வரும் எனக்குச் சில நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. சில வெற்றிப் படங்கள் அமைந்தால், நானும் முன்னணி நடிகையாக மாறிவிடுவேன் என்பது நன்றாகத் தெரியும்.
“நல்ல கதாபாத்திரம் என்றால் நாயகியாக அல்லாமல் மற்ற வேடங்களிலும் நடிப்பேன். நல்ல படங்களில் எனது பங்களிப்பும் இருந்தால் போதும் என்பதுதான் எனது விருப்பம்,” என்கிறார் பவ்யா திரிகா.
இவருக்கு இப்போதுதான் 27 வயதாகிறது. தெலுங்கு படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
“எனது பள்ளிப் படிப்பைச் சென்னையில்தான் மேற்கொண்டேன். அதன் பிறகு சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரியில்தான் பட்டப்படிப்பை முடித்தேன்.
“முதல் படத்தில் நடித்தபோது சற்றே படபடப்பாக இருந்தது. ஆனால் படத்தின் இயக்குநர் தினேஷ் பழனிவேல் தைரியமூட்டி நடிக்க வைத்தார். 2022ல் ’கதிர்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நிலையில் அதே ஆண்டு கன்னடத்திலும் அறிமுகமானேன்.
“அங்கு பிரபு சீனிவாஸ் இயக்கிய ’டாலி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர்தான் திரையுலகில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,” என்று சொல்லும் பவ்யா சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
குறுகிய காலத்திலேயே சில ஆயிரம் பேர் இவரை பின்தொடர்கிறார்கள். எதிலும் வெளிப்படையாக பேசுவதுதான் இவரது இயல்பாம்.
தமிழில் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்ற ஆசை பவ்யாவிற்கும் உள்ளது. ஆனால் எது குறித்தும் தாம் அவசரப்படவில்லை என்கிறார்.