நடிகர் விஜயகாந்த் 1980ல் வெளிவந்த ‘தூரத்து இடிமுழக்கம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து ஒரு நிலையான இடத்தைத் தமிழ் சினிமாவில் பிடிக்க முற்பட்டார்.
1981ல் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் இவர் நாயகனாக நடித்து வெளிவந்த ‛சட்டம் ஒரு இருட்டறை’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தையும் தந்தது.
அதன் பிறகு தன்னை ஒரு அதிரடி நாயகனாக காண்பிக்க நினைத்து அதற்கேற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பல வெற்றிப்படங்களை தந்தார் விஜயகாந்த். தன்னால் குணசித்திர வேடமேற்று நடித்தும் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்த படம் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளிவந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற திரைப்படமாகும். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இதனைத் தொடர்ந்து ‘அம்மன் கோயில் கிழக்காலே’ ‘தழுவாத கைகள்’ ‘ஊமை விழிகள்’ என்று பேர் சொல்லும்படி இவருடைய படப்பட்டியல் நீண்டது.
1991ல் இயக்குநர் ஆர்கே செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இத்திரைப்படம் விஜயகாந்திற்கு 100வது திரைப்படம் என்ற அந்தஸ்தோடு வந்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்திற்கு பின்னர் தான் இவரை இவருடைய ரசிகர்களும் இவருடைய கட்சித் தொண்டர்களும் அன்போடும் மரியாதையோடும் ‘கேப்டன்’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.