வைபவ் நடிப்பில் உருவாகி உள்ளது ‘ஆலம்பனா’ திரைப்படம். இப்படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை நிச்சயம் அனைவரையும் கவரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரி கே.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆலம்பனா’ படத்தில் பார்வதி நாயகியாக நடித்துள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் விரும்பிப் பார்க்கும் படைப்பாக ‘ஆலம்பனா’ உருவாகி உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. எனினும் சில சிக்கல்களால் படம் உரிய நேரத்தில் வெளியீடு காணவில்லை.
இந்நிலையில், படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய வைபவ் முனீஸ்காந்த், காளி வெங்கட் போன்ற மூத்த நடிகர்களுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி தருவதாக இருந்தது என்றார்.
“படத்தின் கதையைக் கேட்டபோது அருமையாக இருப்பதாக தயாரிப்புத் தரப்பிடம் கூறினேன். யார் கதாநாயகன் என்று நான் கேட்டபோது, ‘நீங்கள்தான்’ என்றனர்.
“இதற்கு முன்பு ஜெய், பிரேம்ஜி போன்றவர்களுடன்தான் அதிகம் நடித்துள்ளேன். அதிலிருந்து மாறுபட்டு மூத்த கலைஞர்களுடன் இணையும் வாய்ப்பு அமைந்துள்ளது.
“படத்திற்கு இசையமைக்க ‘ஹிப்ஹாப்’ ஆதியை தொடர்புகொள்ள முடியவில்லை என்று இயக்குநர் கூறியபோது நானே அவரிடம் நேரடியாகப் பேசினேன். பூதம் சம்பந்தப்பட்ட கதை என்றவுடன், உங்களுக்கு பூதம் கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும் என ஆதி நையாண்டி செய்தார்.
“படத்திற்குச் சிறப்பாக இசையைத்துள்ளார். இந்தப் படத்தில் உண்மையாக சிரித்து மகிழும் அளவிற்கு நகைச்சுவை இருக்கும். மேலும், புதுவிதமான குடும்பப் படமாகவும் இருக்கும்,” என்கிறார் வைபவ்.