சூரியும் அன்னா பென்னும் இணைந்து நடித்த ‘கொட்டுக்காளி’ படம் பெர்லின் அனைத்துலக திரைப்படவிழாவில் வெளியிட இருப்பது தமிழ்த் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
அனைத்துலக அளவில் பாராட்டுகளையும் உலகத்தளத்தில் புகழையும் ஒரு திரைப்படம் பெறப்போகிறது என்ற விஷயம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே பெருமையான ஒன்று. அந்த வகையில், வருகிற 2024ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு நிச்சயம் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என்கின்றது கோலிவுட்.
இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் தான் இயக்கிய ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தை அனைத்துலக பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறார்.
பெர்லினில் 2024 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்பட ‘கொட்டுக்காளி’ படம் தேர்வாகியுள்ளது. இந்த விழாவில் திரையிட தேர்வாகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் பெறுகிறது ‘கொட்டுக்காளி’.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கும் இந்தப் படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்க சூரி, அன்னா பென் மற்றும் பலர் தங்களது திறமையான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.
‘கொட்டுக்காளி’ படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயன் கூறுகையில், ”நம்பிக்கைக்குரிய திறமைசாலிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் செயல்பட்டு வருகிறது.
“அதிர்ஷ்டவசமாக, என்னைச் சுற்றி தொழில் மீது ஆர்வம்கொண்ட திறமைசாலிகள் இருக்கின்றனர். மொழி மற்றும் பிராந்திய தடைகளுக்கு அப்பால் அனைவருக்கும் உள்ள மனித உணர்ச்சிகளை அங்கீகரிக்கும் தனித்துவமான கதைகளை உருவாக்க எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.
“இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொடுத்திருக்கும் ஓர் அற்புதமான படைப்பை நாங்கள் தயாரித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.
“பெர்லின் அனைத்துலக திரைப்பட விழா என்பது உலகத் திரையுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இடம். மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் மறக்க முடியாத பெருமைமிகு நினைவாகவும் இது இருக்கும்,” என்றார்.
“இதுபோன்றதொரு பெருமைக்குரிய படைப்பை தயாரிக்க உத்வேகம் அளித்து அதை அனைத்துலக அரங்கிற்கு கொண்டு செல்லவும் ஊக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கும் எனது அன்பிற்குரிய ரசிகர்களாக உங்களுக்கே அனைத்து பெருமையும் சேரும்,” என்று கூறியுள்ளார்.