சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார்.
மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த நன்கொடை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்ட திரு உதயநிதி, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளதை அறிவித்ததுடன், அவரிடமிருந்து தாம் காசோலை பெற்றுக்கொள்ளும் புகைப்படத்தையும் பகிர்ந்தார்.
“மிச்சாங் புயல், கனமழையைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த முயற்சிக்கு துணைநிற்கும் விதமாக நிறுவனங்கள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.
“இந்நிலையில், இன்று நம்மைச் சந்தித்த நடிகர், சகோதரர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம். இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்,” என திரு உதயநிதி அப்பதிவில் குறிப்பிட்டார்.