‘மவுனராகம்’ படத்தில் ரேவதியின் தந்தையாக சந்திரமவுலி கதாபாத்திரத்தில் நடித்து, கார்த்திக்கால் ‘மிஸ்டர் சந்திரமவுலி’ என்று அழைக்கப்பட்டு பிரபலமான ரா.சங்கரன் புதன்கிழமை காலமானார்.
1974ஆம் ஆண்டு சிவகுமார் நடிப்பில் வெளியான ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரா.சங்கரன். ‘தேன் சிந்துதே வானம்’, ‘தூண்டில் மீன்’, ‘வேலும் மயிலும் துணை’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கம் தவிர நடிப்பிலும் கவனம் செலுத்தினார். ‘புதுமைப்பெண்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘மவுன ராகம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் கதாநாயகிகளுக்குத் தந்தையாகவும் நடித்துள்ளார்.
‘மவுனராகம்’ படத்தில் ரேவதியின் தந்தையாக சந்திரமவுலி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தில் ‘மிஸ்டர் சந்திரமவுலி’ என அவரை அப்படத்தின் நடிகர் கார்த்திக் அழைக்கும் காட்சி திரைப்பட ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் சங்கரனைப் பிரபலமாக்கியது.
1999க்கு பின் எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் 91 வயதாகும் ரா.சங்கரன் புதன்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.