கதாநாயகர்களை மட்டுமே உயர்த்திப் பிடித்தால் கதாநாயகிகளால் எப்படி வளர முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் ஜோதிகா.
திரைத்துறையில் கதாநாயகர்களைவிட நாயகிகளும் மற்ற பெண் கலைஞர்களும் பத்து மடங்கு அதிகம் உழைப்பதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்கள் மிகவும் குறைவு என்று குறிப்பிட்டுள்ள அவர், நாயகிகளை மையப்படுத்தி வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது தரமான படைப்புகளில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தான் முடிவு எடுத்ததாகவும் அதன் பலனாகவே இன்று தமக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் ஜோதிகா குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் ‘யூடியூப்’ சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
“கடந்த, 10,15 ஆண்டுகளாக புது இயக்குநர்கள் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை இயக்கி வருகின்றனர். ஆனால் பெரிய இயக்குநர்கள் அவ்வாறு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இந்தியில் நடிகை ஆலியா பட்டை வைத்து ‘கங்குபாய்’ என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.
“மலையாளத்திலும் பெரிய இயக்குநர்கள் பெண்களை மையப்படுத்திப் படங்களை இயக்குகின்றனர். ஆனால் தமிழில் மட்டுமே இத்தகைய முயற்சிகள் ஏதும் இல்லை,” என்று ஜோதிகா வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
சில பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தாலும் அவற்றில் தனது கதாபாத்திரத்திற்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்றும் எனவே அப்பாத்திரங்களில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்றும் ஜோதிகா திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
“சில இயக்குநர்கள் என்னைத் தேடிவந்து கதை சொல்லிவிட்டு இரண்டு காட்சிகளில் நடித்தால்கூட போதும் என்றெல்லாம் சொல்லுவார்கள். இது மிகவும் மோசமான அணுகுமுறை.
“சில நேரங்களில் ரசிகர்கள் பலர் பாசத்துடன் என்னை ‘தமிழ்நாட்டு மருமகள்’ என்பார்கள். கோபம் ஏற்பட்டால் ‘இந்திக்காரி’ என்று குறிப்பிடுவார்கள். சமூக ஊடகங்களில் சிலர் ‘குயின்’ என்றும், மற்றொரு தரப்பினர் ‘கிழவி’ என்றும் விமர்சிப்பார்கள்.
“அப்போதெல்லாம் நான் யார் என்று எனக்குள் கேட்டுக்கொள்வேன். திரைத்துறைப் பணிகளைக் கடந்து எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.
“கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் கதைகளில் நடிக்க நான் பெரிதும் விரும்புகிறேன். கடந்த 25 ஆண்டுகளாகத் திரை உலகில் இருந்து வருகிறேன். நான் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்துமே எனக்குப் பிடித்தமானவைதான்.
“‘மொழி’, ‘36 வயதினிலே’ ஆகிய படங்கள், அந்தக் கதாபாத்திரங்கள் மிகவும் பிடித்தமானவை. வழக்கமான கதாபாத்திரங்களுடன் என்னைச் சந்திக்க வரும் இயக்குநர்களிடம் என் மனத்தில் தோன்றும் கேள்விகளை வெளிப்படையாக கேட்டுவிடுவேன்.
“இதுபோன்ற கதாபாத்திரங்களில் நான் ஏன் நடிக்க வேண்டும் என்று கேட்டதுண்டு,” என ‘நீயா நானா’ நிகழ்ச்சி புகழ் கோபிநாத் உடனான நேர்காணலின் போது வெளிப்படையாகப் பேசியுள்ளார் ஜோதிகா.
இவரது இப்பேட்டி சமூக ஊடகங்களில் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி உள்ளது.