இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மூன்று பேர் இயக்குநர்களாக உயர்ந்துள்ளனர்.
‘கூசே முனிசாமி வீரப்பன்’ படத்தை இயக்கிய ஷரத் ஜோதி, நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’யை இயக்கிய நிலேஷ், ‘ஜிகிரி தோஸ்த்’ படத்தின் இயக்குநர் அறன் ஆகிய மூவரும்தான் அவர்கள்.
வழக்கமாக, சங்கரிடம் பணியாற்றுவோர் இயக்குநர்களாக மாறுவதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால், அறன் நாயகனாகவும் நடிக்கிறார்.
“இது திட்டமிட்டு அமைந்த விஷயமல்ல. சூழல் என்னை நடிகனாக மாற்றி உள்ளது. இதற்கு முன்பு நான் இயக்கிய குறும்படங்களில் நடித்திருக்கிறேன். அதற்காக ‘சைமா’ விருதும் பெற்றுள்ளேன்.
“ரஜினியும்கூட என்னுடைய நடிப்பைப் பார்த்து, பாராட்டி கடிதம் அனுப்பி உள்ளார்,” என்கிறார் அறன்.
இவரது நட்பு வட்டத்தில் உள்ள அனைவருமே இவரது நடிப்பைப் பார்த்துவிட்டு, ‘ஏன் கதாநாயகனாக நடிக்கக் கூடாது’ என்று கேள்வி எழுப்பி ஊக்கமளித்தார்களாம்.
இவர் இயக்கிய குறும்படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் பிரதீப்ஜோஸ்தான் அதை திரைப்படமாக்கலாம் என்று கூறியுள்ளார். அதுதான் ‘ஜிகிரி தோஸ்த்’ பட உருவாக்கத்தின் முதல் புள்ளியாக அமைந்ததாம்.
இந்தப் படத்தில் நடிகர் ரியாஸ்கானின் மகன் ஷாரிக் ஹாசன், வி.ஜே. ஆஷிக், அவர்களுடைய நண்பர்களில் ஒருவராக அறன் என மூன்று நாயகர்கள். அம்மு அபிராமி, பவித்ரா லட்சுமி, அனுபமா குமார், மதுமிதா என ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்கள்தான் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அறனின் குறும்படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழுவினர்தான் திரைப்படத்திலும் பணியாற்றி உள்ளனர். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குழுவில் இருந்து வந்த அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.
“இந்தப் படத்தின் கதை உருவான விதம் மிகவும் யதேச்சையானது. நண்பருடன் ஓரிடத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர் ஏதோ செய்யப்போக, அங்கிருந்த அனைவரது கைப்பேசி எண்களும் குறிப்பிட்ட ஒரு நண்பரின் கைப்பேசிக்கு அடுத்தடுத்து வரத்தொடங்கின.
“எனக்கு பெரும் ஆச்சரியம். அந்தத் தருணத்தில் மனதில் தோன்றிய கதை இது. நான், ஷாரிக், ஆஷிக் ஆகிய மூவரும் மகாபலிபுரம் பகுதிக்குச் செல்லும்போது அங்கு பவித்ராவை சிலர் கடத்திச் செல்வதைப் பார்த்துவிடுகிறோம்.
“வில்லனுடன் நேருக்கு நேர் பலம்காட்டி மோதாமல், எங்களுடைய அறிவைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை எப்படிக் காப்பாற்றுகிறோம் என்பதுதான் கதை.
“இந்தப் படத்தை இயக்குவது குறித்து எனது குருநாதன் சங்கரிடம் தெரிவித்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். திட்டமிடுதல் என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அது எனது படத்தை இயக்குவதற்கு பெரிதும் கைகொடுத்தது,” என்கிறார் அறன்.