மலேசியாவில் சூதாட்டத்தை மையக்கருவாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கிறார்.
கடந்த 2018ல் விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆறுமுக குமார். அந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால் மலேசியாவிலேயே முழுப் படப்பிடிப்பும் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு ஊர் திரும்பிய இயக்குநர் ஆறுமுக குமார் இந்த படம் பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மலேசியாவில் சூதாட்டம் என்பது மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு விதமான வடிவங்களில் சூதாட்டம் இருக்கிறது.
“அதை மையமாக வைத்து உருவாகும் பகை, மோசடி, கடன் மற்றும் இது தொடர்பான குற்றங்களின் பின்னணியில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
“இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமே சற்று மர்மம் நிறைந்ததாக இருக்கும். இதில் அவர் சில வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார்.
“அவருடன் படம் முழுவதும் கூடவே பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். படத்தின் கதையே யோகிபாபுவை சந்திப்பதற்காக விஜய் சேதுபதி மலேசியா கிளம்பி செல்வதாகத்தான் ஆரம்பிக்கிறது.
படத்தின் 70 நாட்கள் படப்பிடிப்பில் 53 நாட்கள் யோகிபாபு கலந்துகொண்டு நடித்துள்ளார்,” என்று கூறியுள்ளார்.