‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் தமிழில் பேசி நடித்தேன் என்று பெருமையாக கூறினார் இந்திப்பட நாயகி கேத்ரினா கைஃப்.
பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் ராகவன் இயக்கும் படம், ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப், ராதிகா சரத்குமார், சண்முகராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜனவரி 12ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் ஜெட்டாவில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட கேத்ரினா கைப்ஃ ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடித்த தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், “இந்தி, தமிழில் உருவாகியுள்ள படம் இது. இரண்டு மொழிக்கும் தனித்தனியாக படப்பிடிப்பு எடுக்கப்பட்டது.
அதனால் அனைத்துக் காட்சிகளும் இரண்டு முறை எடுக்கப்பட்டது. அது மிகவும் வித்தியாசமான அனுபவமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. தமிழ்ப் பதிப்புக்காக நான் தமிழில் பேசி நடித்தேன்.
நான் நடித்த படங்களிலேயே மிகவும் கஷ்டமாக இருந்த படம் இதுதான். ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமாகவும் சவாலாகவும் இருந்தது.
விஜய் சேதுபதியின் படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக நினைத்து இருந்தேன்.
அந்த வாய்ப்பு இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது. விஜய் சேதுபதி அற்புதமானவர். இந்திப் பதிப்பைப் படமாக்கும்போது ஒரு மாதிரியாக இருப்பார். தமிழ்ப் பதிப்பை படமாக்கும்போது அவர் வேறொருவராக மாறியிருப்பார். அவருடன் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது,” என்று பேசினார்.