நகைச்சுவை நடிகராக திரையில் தோன்றி தற்பொழுது படத்தின் நாயகனாக முன்னேறி இருக்கும் நடிகர் சூரி நகைச்சுவையாக நடிப்பது மிகவும் சிரமம் என்று கூறியுள்ளார்.
நடிகர் சூரியிடம் அவருடைய எதிர்காலம் பற்றி கேட்கையில், “நேற்று நகைச்சுவைக் கலைஞராக நடித்தேன். இன்று நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து என்ன? யாருக்கும் தெரியாது. எந்த வாய்ப்பு வந்தாலும் அது சரியாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து பயணிக்கவேண்டும்.
“நகைச்சுவை நடிகனாக நடிக்க அதிகமாக உழைக்கவேண்டும். படப்பிடிப்புகளில் சும்மா இருக்கமுடியாது. மக்களை எந்த வகையில் சிரிக்க வைக்க முடியும் என சிந்தித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
“இன்றைய காலகட்டத்தில் பஞ்ச் வசனங்களை மக்கள் கவனிக்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன் பத்து பஞ்ச் வசனங்கள் பேசினால் ஒன்பது மக்களிடம் சென்று சேரும். ஆனால், இன்று நூறு பஞ்ச் வசனங்கள் பேசினால் ஒன்றிரண்டுதான் மக்களிடம் போய் சேர்கிறது.
“நாங்கள் திரைக்கு உள்ளே இருக்கிறோம். ரசிகர்கள் திரைக்கு வெளியே இருக்கிறார்கள். நகைச்சுவை திரைக்கு உள்ளே இருப்பதைவிட வெளியே இருக்கும் ரசிகர்களிடம் அதிகம் இருக்கிறது.
“ஆனால் நாயகன் ஆன பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இயக்குநர்கள் சொல்வதை உள்வாங்கி கொண்டு செய்தால் போதும். கடவுள் புண்ணியத்தில் இந்தளவுக்கு நான் உயர்ந்து நிற்க காரணம் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த படங்களும் என்னை இயக்கிய இயக்குநர்களும்தான்,” என்று கூறினார்.