பணவீக்கத்தால் பொருள்களின் விலை உயர்கிறது. அதிகப்படியான வட்டி விகிதங்களுக்கிடையே வேலைக்குச் செல்வோரும் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.
இதனால், ஓய்வுக்காலத் திட்டமிடுதல் பின்னுக்குத் தள்ளப்படுவது கவலைக்குரிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. புதிதாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இவ்வாறு கூறுகிறது.
இந்த ஆய்வின் அடிப்படையில் ஓசிபிசி திரட்டிய ‘பைனான்ஷியல் வெல்நஸ் இன்டெக்ஸ்’, இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ளது.
2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வுக் குறியீடு, தற்போது ஆகக் குறைவாக, 60 புள்ளிகளில் உள்ளது.
அதிகரிக்கும் பணவீக்கம், உயரும் வட்டி விகிதங்கள், பொருளியல் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் ஆகியவற்றால் செலவுகள் தொடர்பிலும் கடன் பெறுவது தொடர்பிலும் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், இதுவும் வரவேற்கத்தக்க ஒரு மனப்போக்கு. ஏனெனில், சீரான காலங்களைக் காட்டிலும் நிச்சயமற்ற காலகட்டத்தால் நிதி நிர்வாகம் தொடர்பில் மக்கள் கூடுதல் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முற்படுவர்.
இருப்பினும், வேலைக்குச் செல்லும் 2,000 பெரியவர்களுக்கிடையே ஓசிபிசி மேற்கொண்ட இந்த ஆய்வில், வாழ்க்கைமுறைத் தேவைகள் வரிசைப்படுத்தப்பட்டதில் ஒரு சிக்கல் தென்பட்டது. ஆய்வில் 21 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் ‘பைனான்ஷியல் வெல்நஸ்’ அதாவது நிதி நல்வாழ்வு தொடர்பான 10 அம்சங்களில் மதிப்பிடப்பட்டனர்.
சேமிப்புப் பழக்கம், வசதிக்கு மீறி செலவு செய்தல், நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள பாதுகாப்பு, ஓய்வுக்காலத் திட்டமிடல், சீக்கிரம் லாபம் ஈட்டுவதற்கான ஊகங்கள் போன்றவை இந்த அம்சங்களில் அடங்கும்.
இந்த 2023 ஆய்வின்படி ‘ஓய்வுக்காலத் திட்டமிடல்’ பட்டியலின் இறுதி நிலையில் இடம்பெற்றிருந்தது. இது வரவேற்கத்தக்க போக்கு அன்று.
ஓய்வுக்காலம் தவிர்க்கமுடியாத ஒன்று. அதற்காக நிதியளவில் தயாராவதும் ஒருவர் தான் வேலை செய்யும் நாள்களிலிருந்து முடிந்தவரை சீக்கிரமாக ஓய்வுக்குத் தயாராவதும் மன அமைதியைத் தரும்.
ஒருவர் வேலை பார்க்கும் காலத்தில் பணம் தேவைப்படும் காலகட்டத்திற்காக நிதி ஒதுக்குவது நல்லது. உடல் இயலாமை உட்பட ஒரு முழுமையான காப்புறுதித் திட்டம் பற்றி சிந்திப்பதும் நல்லதுதான். முதியவர்களை மட்டுமே உடல் இயலாமை பாதிக்கும் என்று நினைப்பது தவறு.
இருப்பினும், இவை எல்லாவற்றுக்கும் இடையே ஓய்வுக்காலமே மக்களின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்.
ஓய்வுக்காலம் உடனடியாக ஏற்படும் ஒன்று அல்ல என்பதால் அதற்கான திட்டமிடலைத் தள்ளிப்போடுவதால் பிற்காலத்தில் செலவுகள்தான் அதிகரிக்கும்.
அதிலும், இறுதிச் சம்பளத்துக்குப் பின்னும் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் செலவுகள் அதிகரிக்கவே செய்யும்.
வெவ்வேறு நிதிச் சூழல்களில் உள்ள மக்களுக்கு ஒரேவிதமான சேமிப்பு ஆற்றல் இருக்காது.
ஆனால், செலவுகளை முடிந்தவரை குறைப்பது முக்கியம். குறிப்பாக, முக்கியம் அல்லாதவற்றுக்கான செலவுகளைக் குறைத்து அடிப்படைப் பொருளியல் தேவைகள் மீது கவனம் செலுத்துவது அவசியம்.
ஓய்வுக்காலத் திட்டமிடலும் அதில் ஒன்று.
ஓய்வுக்காலத் திட்டமிடுதலை அதிகக் காலம் தள்ளிப்போடுவோர், தங்களில் 20 வயதுகளில் உள்ளவர்கள் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது கவலைக்குரிய மற்றோர் அம்சம்.
ஒருவர் தனது ஓய்வுக்காலத் திட்டமிடுதலைத் தொடங்க 20 வயதுகளில் உள்ள காலமே சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில், சொத்து அடமானங்கள், குடும்பம் தொடங்குவதற்கான செலவு ஆகியவற்றால் பாரம் இல்லாத வயது இது.
அத்துடன், தொடர்ந்து நீடிக்கவுள்ள வேலை ஆண்டுகளால் வட்டி மீது வட்டி ஈட்ட அவகாசம் கிடைத்து நல்ல பலனைப் பெறவும் முடியும்.
மக்கள் தங்களின் 30 வயதுகளில் இருக்கும்போது செலவுகள் அதிகரிக்கும். தங்களின் 40 வயதுகளில் இருப்போர் ஈட்டுவது உச்ச வரம்பு வருமானமாக இருந்தாலும் இளம் பிள்ளைகளுக்கும் வயதான பெற்றோருக்கும் ஆதரவு தரும் ஊழியர்களாக இருப்போரும் இப்பிரிவில் அதிகம்.
எனவே, ஓய்வுக்காலத் திட்டமிடுதலை விரைவில் தொடங்கினால் நீண்டகாலத்திற்குக் கூடுதல் பலன் காணலாம்.