முத்தமிழை நவீன பாணியில் சங்கமிக்கச் செய்தது, ராஃபிள்ஸ் கல்வி நிலைய இந்தியப் பண்பாட்டு மன்றத்தின் ‘சங்கமம் 2024’.
சமூக சிந்தனையையும் நகைச்சுவையையும் ஒருசேர வழங்கிய இந்நிகழ்ச்சி ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்றது. 350 பேருடன் அரங்கமே நிறைந்திருந்தது.
சங்கமம் 2024 நுழைவுச்சீட்டு விற்பனையிலிருந்து திரட்டப்பட்ட தொகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சிறுவர் இல்லத்துக்கு $2,000 வழங்கப்பட்டது.
“மாணவர்கள் தொண்டூழியம் புரிந்து அர்த்தமுள்ள நிகழ்ச்சியைப் படைக்க வேண்டும் என்பதால்தான் இதை ஓர் அறநிகழ்ச்சியாகப் படைக்க முடிவெடுத்தோம்,” என்றார் ராஃபிள்ஸ் கல்வி நிலைய ஆசிரியர் முனைவர் ச.ஜெகதீசன்.
மக்கள் கழக நற்பணிப் பேரவைத் தலைவரும் முன்னாள் ராஃபிள்ஸ் மாணவருமான திரு ராமமூர்த்தி நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
உயர்நிலை மாணவர்களுக்கான மூன்று போட்டிகளின் இறுதிச் சுற்றுகளும் நடைபெற்றன.
திருக்குறள் மனனப் போட்டியில் இந்தியர் அல்லாத மாணவர்கள் மூன்று குறட்பாக்களையும் அவற்றின் பொருளையும் விவரித்துப் பார்வையாளர்களை வியப்பூட்டினர். ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியின் கேலி சிம், 13, முதல் பரிசு பெற்றார்.
‘வாங்க சிரிக்கலாம்’ அங்கத்தில் மாணவர்கள், மக்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தனர். முதல் பரிசை யூனிட்டி உயர்நிலைப் பள்ளி தட்டிச் சென்றது.
மக்கள் இசை/தமிழ் சொல்லிசைப் போட்டியில் தமிழ் ‘ராப்’ பாடல்களை மாணவர்கள் படைத்தனர். செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையம் முதல் பரிசைத் தட்டிச் சென்றது. சவால் கிண்ணத்தையும் செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையம் வென்றது.
நடனம், இசையோடு இவ்வாண்டு மூன்று சுவாரசியமான, கருத்துள்ள நாடகங்கள் இடம்பெற்றன.
முதல் நாடகம், ஆங்கிலேயர்கள் தமிழர்களை ஆண்ட காலத்தில் வதைத்த கொடுமைகளையும் பாரதியாரின் முழக்கவரிகளுக்கேற்ப அவற்றைத் தட்டிக் கேட்கும் புதுமைப் பெண்ணையும் காண்பித்தது.
விரும்பிய பெண்ணை மணப்பதற்காக மாமனாரின் நிபந்தனைக்கு உட்பட்டு ஒயிலாட்டம் கற்கும் காதலரை இரண்டாம் நாடகம் மையப்படுத்தியது.
மூன்றாவது நாடகத்தில், திரைப்படம் எடுக்க விரும்பும் ஓர் இளையர், ஒரு தயாரிப்பாளரைப் பகைத்துக் கொண்ட பின்னர் வாய்ப்புக் கிடைக்காமல் திணறுகிறார். தந்தையும் அவரை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். அவர் பின்னர் நண்பரின் தியாகத்தினால் திரைப்படத் துறையில் முன்னேறுகிறார்.
சங்கமம் 2023 ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சரிகா, 2021/2022 ஆண்டுகளில் பல நிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்று இந்தியப் பண்பாட்டு மன்றத்திற்குச் சிறப்புச் சேர்த்த சாதனா ரமேஷ் ஆகிய முன்னாள் ராஃபிள்ஸ் கல்வி நிலைய இந்தியப் பண்பாட்டு மன்ற மாணவர்கள் இருவருக்கு உன்னத விருதுகளும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.