தோக்கியோ: தோக்கியோவின் ஹனேதா விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது என அந்நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
ஆறு நாட்களுக்கு முன்பு ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்றும் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த சிறிய விமானம் ஒன்றும் ஓடுபாதையில் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன. இவ்விபத்தில் கடலோரக் காவற்படை விமானத்திலிருந்த ஆறு ஊழியர்களில் ஐவர் உயிரிழந்தனர்.
பயணிகள் விமானத்திலிருந்த 379 பயணிகளும் சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இவ்விபத்தால், ஹனேதா விமான நிலையத்தில் இருக்கும் நான்கு ஓடுபாதைகளில் விபத்து நடந்த ஓடுபாதை ஜனவரி 2ஆம் தேதி மூடப்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
விபத்துக்குள்ளான விமானங்களின் சிதைவுகள் அவ்விடத்திலிருந்து பிரான்ஸ், கனடா, பிரிட்டிஷ் நாட்டு ஊழியர்களின் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன என்றும் ஓடுபாதை ‘சி’ திங்கட்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது என்றும் தோக்கியோ விமான நிலையத்தின் பேச்சாளர் ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.