சோல்: தென்கொரிய மருத்துவமனைகளில் வெளிநாட்டு மருத்துவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படுவர் என அந்நாட்டு பிரதமர் வெள்ளிக்கிழமையன்று (மே 10) தெரிவித்ததாக ஏஎஃப்பி கூறியது.
மேலும், கடுமையான சோதனைச் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் பணியமர்த்தப்படுவர் என்றும் அவர் கூறியதாக அது தெரிவித்தது.
தென்கொரியாவில் பயிற்சி மருத்துவர்கள் இவ்வாண்டு பிப்ரவரி 20ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்திற்கு எந்தவொரு தீர்வும் எட்டப்படாத நிலையில் தென்கொரிய அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென்கொரிய மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து அந்நாட்டுப் பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஏற்கெனவே சில சலுகைகளைத் தென்கொரிய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வெளிநாட்டு மருத்துவ உரிமங்களைக் கொண்ட மருத்துவர்கள் தென்கொரியாவில் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவர் என்று அந்நாட்டு அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது.