துபாய்: ‘கோலன் ஹைட்ஸ்’ வட்டாரத்தில் இருந்து சிரியா தலைநகர் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியை நோக்கிப் பாய்ச்சப்பட்ட இஸ்ரேலிய ஏவுகணைகளை சிரியாவின் ஆகாயத் தற்காப்புப் படைகள் வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் அதன் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி, டமாஸ்கசில் உள்ள ஈரானியத் தூதரக வளாகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படையைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவரும் இதர ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் முதன்முறையாக நேரடித் தாக்குதலில் ஈடுபட்டது.