டெல் அவிவ்: இஸ்ரேலில் அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் எடுத்துவருகிறது.
கத்தாரைச் சேர்ந்த ஊடகமான அல்ஜசீரா, ஹமாஸ் அமைப்புக்குச் சாதகமான தகவல்களை வெளியிடும் ஊடகம் என்று இஸ்ரேல் கருதுவது அதற்குக் காரணம். இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடரும் வேளையில் இஸ்ரேலில் அல்ஜசீரா செயல்பாடுகளை முடக்கத் தமது அமைச்சரவை முடிவெடுத்ததாக பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5) தெரிவித்தார்.
இந்நிலையில் ஜெருசலத்தில் உள்ள அல்ஜசீராவின் அலுவலகத்தை காவல்துறையினர் சோதனையிட்டனர். ஜெருசலத்தின் அம்பாசடர் ஹோட்டலில் அந்த அலுவலகம் அமைந்துள்ளது.
அல்ஜசீரா, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று கூறப்படுவதை அந்நிறுவனம் ஓர் ஆபத்தான, அர்த்தமற்ற பொய்யாக வகைப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தனக்கு உரிமை இருப்பதமாகவும் அது குறிப்பிட்டது.