ஜெருசலம்: தனது கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் காஸா மீதான போரை இஸ்ரேல் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், அந்தக் கோரிக்கையை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு நிராகரித்துவிட்டார்.
போரை முழுமையாக நிறுத்தினால் ஹமாஸ், இஸ்ரேலுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கும் என்று அவர் சொன்னார்.
போரைத் தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலுக்கு விருப்பம் உள்ளது என்றும் ஹமாசிடம் 130க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் உள்ளனர் என்றும் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இஸ்ரேலில் அல் ஜசீரா தொலைக்காட்சியின் செயல்பாட்டை நிறுத்த அந்நாட்டு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. காஸா மீதான போர் முடியும் வரை அல் ஜசீரா இஸ்ரேலில் செயல்படாது என்று நெட்டன்யாகு கூறினார்.
அல் ஜசீரா தொலைக்காட்சியால் நாட்டின் பாதுகாப்பிற்குப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.