தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் அமைந்துள்ள ‘ஹலோ கிட்டி’ எனும் கற்பனைக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கேளிக்கை பூங்கா சனிக்கிழமை ( பிப்ரவரி 24) மூடப்படும் என அப்பூங்கா அதிகாரி தெரிவித்தார்.
மின்னஞ்சல் மூலம் பயங்கரவாத மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
“எங்கள் வாடிக்கையாளர்கள், கலைஞர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான நேரம் இல்லாத காரணத்தால் பூங்கா தற்காலிகமாகச் சனிக்கிழமை மூடப்படுகிறது,” என்று ‘சேன்ரியோ புரோலேண்ட்’ பூங்கா அதன் இணையதளத்தில் தெரிவித்தது.
பயங்கரவாத மிரட்டலைத் தொடர்ந்து அப்பூங்காவைச் சோதனை செய்த அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை என அந்நாட்டு அரசாங்க ஒலிபரப்பு நிறுவனமான என்எச்கே கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.