புக்கெட்: தாய்லாந்தின் புக்கெட் மாநிலத்தில் சீனாவைச் சேர்ந்த பெண்ணிடமிருந்து சிங்கக்குட்டி ஒன்றைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
புக்கெட்டில் உள்ள ஓர் உணவகனத்தில் சிங்கக்குட்டி இருப்பதைக் காட்டும் காணொளி பிப்ரவரி 12ஆம் தேதியன்று சுற்றுப்பயணி ஒருவரால் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து, பிப்ரவரி 13ஆம் தேதியன்று புக்கெட் காவல்துறையினர் அந்த உணவகத்துக்கு விரைந்தனர்.
அப்போது அந்த சிங்கக்குட்டி அங்கு இல்லை.
இருப்பினும், அந்த சிங்கக்குட்டியை 250,000 பாட் (S$9,300) கொடுத்து வாங்கி தலைநகர் பேங்காக்கிலிருந்து வரவழைத்ததாக உணவகத்தின் உரிமையாளரான 31 வயது செர்ன் மின் ஒப்புக்கொண்டார்.
உணவகத்துக்குப் பின்புறத்தில் உள்ள ஹோட்டலில் இருந்த தமது அறைக்கு அவர் அதிகாரிகளை அழைத்துச் சென்றார்.
சிங்கக்குட்டி அங்கு இருந்தது.
சிங்கக்குட்டியை வைத்திருக்கவும் வளர்க்கவும் தேவையான உரிமம் அப்பெண்ணிடம் இல்லை.
சிங்கக்குட்டியை அதிகாரிகள் மீட்டு வனவிலங்கு காப்பகத்துக்குக் கொண்டு சென்றனர்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக அப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.