சியாங்மாய்: தாய்லாந்தின் சியாங்மாய் நகரில் கரடியிடமிருந்து தப்பிக்க, சுவிஸ் ஆடவர் ஒருவர் தமது கையையே வெட்டிக்கொண்டார்.
வனவிலங்குத் தொண்டூழியரான 32 வயது திரு ஸ்டெஃபான் ஸ்பெக்கொக்னா, கரடிக்கு உணவு ஊட்ட அதன் கூண்டுக்குள் கையை நீட்டியபோது எதிர்பாராத விதமாக அந்தக் கரடி அவரது கையைக் கவ்வியது.
திரு ஸ்பெக்கொக்னா எவ்வளவு முயன்றும் கரடி அவரது கையை விடவில்லை.
வேறு வழியின்றி தம்மைக் காப்பாற்றிக்கொள்ள கத்தி ஒன்றைப் பயன்படுத்தி தமது கரத்தை அவர் வெட்டிக்கொண்டார்.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அவருக்கு முதலுதவி அளிக்க விரைந்தனர்.
பிறகு அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரது கரம் முழங்கைக்குக் கீழ் வெட்டப்பட்டிருந்ததாக பேங்காக் போஸ்ட் நாளிதழ் தெரிவித்தது.
துண்டிக்கப்பட்ட அவரது கரம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கரடியை அடித்துத் துன்புறுத்துவதற்குப் பதிலாக திரு ஸ்பெக்கொக்னா தமது கரத்தை வெட்டிக்கொண்டார் என்றும் அவர் நல்லுள்ளம் கொண்டவர் என்றும் பிரிட்டிஷ் நாளிதழான ‘தி சன்’ அவரைப் பாராட்டியது.
சம்பந்தப்பட்ட கரடி டோய் ஃபா டேங் தேசிய பூங்காவிலிருந்து வனவிலங்கு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகம் தெரிவித்தது.