கோலாலம்பூர்: மூக்கு வழி பயன்படுத்தும் ‘எனர்ஜி ஸ்டிக்சை’ இணையத்தில் விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்துப் பொருள்கள் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் அவை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ‘எனர்ஜி ஸ்டிக்ஸ்’ விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. அதனால் அவை மின்னிலக்க விற்பனை தளங்களில் இருந்து நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எனர்ஜி ஸ்டிக்ஸ்’ விற்பனை செய்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை கூறியது.
இணையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் ‘எனர்ஜி ஸ்டிக்சை’ விற்பனை செய்து வருவது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் இதுபோன்ற பொருள்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பள்ளிகளில் மாணவர்கள் யாரேனும் ‘எனர்ஜி ஸ்டிக்ஸ்’ பயன்படுத்தினால் உடனடியாகத் தகவல் தர வேண்டும் என்றும் கல்வி அமைச்சால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பதிவு செய்யப்படாத மருந்துப் பொருள்களை விற்பனை செய்பவர்களுக்கு 7,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.