மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருக்கும் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேவுக்கும் இடையிலான கூட்டணி இந்த வாரம் பிளவுபட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் போதைப்பொருள் புழக்கம் குறித்துத் தாக்கிப் பேசிக்கொண்டனர். இதனால் ஏற்பட்ட பிளவு, திரு மார்கோசின் சீர்திருத்தத் திட்டத்திற்கு மிரட்டலாக விளங்குவதுடன் அரசியல் நிலைத்தன்மையைப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பிலிப்பீன்சில் ஆக அதிக செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்த திரு மார்கோசும் திரு டுட்டர்டேயின் மகள் சாராவும் 2022ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்ற அவர்களின் கூட்டணி வழிவகுத்தது.
அந்தக் கூட்டணி எந்நேரமும் முறியக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இவ்வளவு விரைவில் அது நிகழ்ந்தது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.
இனி அக்கூட்டணி பழைய நிலைக்குத் திரும்பாது என்று பிலிப்பீன்ஸ் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் ஜீன் என்சினாஸ்-ஃபிரான்கோ கூறினார். இரு குடும்பங்களும் பயன்படுத்திய ஆவேசமான சொற்களை அவர் சுட்டினார்.
முன்னாள் அதிபர் டுட்டர்டேயின் மகனும் டாவோ நகரின் மேயருமான செபாஸ்டியன் டுட்டர்டே, திரு மார்கோசின் அமெரிக்க ஆதரவு வெளியுறவுக் கொள்கை போன்ற தவறான கொள்கைகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென்று கூறியுள்ளார். அக்கொள்கைகள் அப்பாவி பிலிப்பினோக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்றார் அவர்.
பதற்றத்தைத் தணிக்கும் வகையில் விரைந்து செயலாற்றிய திரு மார்கோஸ், கூட்டணிக்குப் பாதிப்பில்லை என்று ஜனவரி 30ஆம் தேதி அறிவித்தார். திருவாட்டி சாரா டுட்டர்டே கல்வி அமைச்சராகத் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.
பொருளியல் வளர்ச்சி, வேலை உருவாக்கம், உள்கட்டமைப்புச் சீரமைப்பு, ஆயுதப் படைகளை வலுவாக்குதல் போன்ற திரு மார்கோசின் திட்டங்களுக்கு கூட்டணி முறிவு மிரட்டலாக விளங்கும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
கூட்டணி முறிந்தால், ராணுவத்திற்குள் புதிய பிரிவுகள் உருவாகக்கூடும். அது ஆட்சிக்கும் நாட்டின் நிலைத்தன்மைக்கும் கடும் தலைவலியாக மாறக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி, பேரணி ஒன்றில் கலந்துகொண்ட திரு டுடார்ட்டே, அதிபர் மார்கோஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று கூறினார். அந்தப் பேரணியில் அவரது மகள் சாராவும் கலந்துகொண்டார்.
அதற்குப் பதிலளித்த திரு மார்கோஸ், “திரு டுட்டர்டே ஏற்கெனவே வலி நிவாரணத்திற்காக ‘ஃபென்டனைல்’ பயன்படுத்தியதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் அவரால் சரியாகச் சிந்திக்க முடியவில்லை போலும்,” என்று கூறினார்.