கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அரச மன்னிப்பு கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.
இதுகுறித்து மலேசிய அரச மன்னிப்பு வாரியம் அண்மையில் கூடி கலந்துரையாடியது.
இந்நிலையில், வாரியம் எடுத்துள்ள முடிவு பிறகு வெளியிடப்படும் என்றும் அதிகாரபூர்வ அறிக்கைக்காகப் பொறுமையுடன் காத்திருக்கும்படியும் மலேசியாவின் பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை அவர் பிப்ரவரி 1ஆம் தேதியன்று 50வது கூட்டரசுத் தினத்தைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
இருப்பினும், அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை.
நஜிப்பின் அரச மன்னிப்பு விண்ணப்பம் குறித்து ஜனவரி 31ஆம் தேதியன்று மலேசிய அமைச்சர்கள் பலர் மௌனம் காத்தனர்.
நஜிப்பின் விண்ணப்பம் குறித்து அமைச்சரவை சிறிது நேரம் மட்டுமே கலந்துரையாடியதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.