குவந்தான் : மலேசியாவின் கேமரன் மலையில் ஜனவரி 26 தேதியன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இரு ஆடவர்கள் மாண்டனர்.
மேலும் மூன்று பேர் உயிருடன் புதையுண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, அதிகாலை மணி 2.51 மணிக்கு பாகாங் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைக்குக் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு, தேடுதல் பணிகள் தொடர்வதாக அப்பிரிவின் இயக்குநர் வான் முகம்மது ஸைடி வான் இஸா கூறினார்.
நிலச்சரிவு கேமரன் மலையில் உள்ள ‘புளூ வேலி’ எனும் சிறிய நகரில் இருக்கும் பத்து 54ல் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட ஐவரும் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என்று கேமரன் மலை மாவட்ட பேரிடர் நிர்வாகக் குழு, மலேசிய ஊடகத்திடம் தெரிவித்தது.
அவர்கள் 25 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அது கூறியது.
அவர்கள் வசித்து வந்த வீடு நிலச்சரிவில் புதையுண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மூன்று பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டு கிடப்பதாக டாக்டர் ஸைடி கூறினார். 36 வயது மதிக்கத்தக்க ஆடவரின் சடலம் காலை 5.40 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டதாக தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.
மற்றோர் ஆடவரின் உடல் புதையுண்ட வீட்டிலிருந்து 10 மீட்டர் தூரத்தில் காய்கறித் தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
மீட்பு, தேடுதல் பணிகளில் பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களிலிருந்து சிறப்புப் படைகள் ஈடுபட்டு வருவதாக டாக்டர் ஸைடி கூறினார்.
தேடுதல் பணியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 132 பேர் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
‘கே9’ பிரிவு மோப்ப நாய்களும் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த முதல் ஒன்பது தீயணைப்பாளர்கள், நிலச்சரிவு நிகழ்ந்த இடத்தை அடைய கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது என்று மலேசிய தீயணைப்புப் படை, மீட்பு பணிகள் துறையின் உதவி இயக்குநர் திரு இஸ்மாயில் அப்துல் கனி கூறினார்.
நிலச்சரிவின் காரணமாக 2 மீட்டர் உயரத்திற்கு மண் குவியல் ஏற்பட்டு அந்த ஐவரின் வீடு புதையுண்டதாக செய்தியாளர் சந்திப்பில் திரு இஸ்மாயில் தெரிவித்தார்.
இதற்கிடையே, மழை தொடர்ந்து பெய்ததாலும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் அடுத்தடுத்து நிகழ்ந்ததாலும் புதையுண்ட வீட்டைச் சுற்றிய இடங்களில் மீட்புப் பணிகள் தடைப்பட்டுள்ளதாக கேமரன் மலை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அஸ்ரி ராம்லி தி ஸ்டார் நாளிதழிடம் தெரிவித்தார்.
மரணத்தை ஏற்படுத்திய நிலச்சரிவு அந்த இடத்தில் நிகழ்ந்திருப்பது இதுவே முதல்முறை என்றார் அவர்.
இந்நிலையில், ஜனவரி 25ஆம் தேதியன்று உலு சுங்கை பாஸில் இன்னொரு நிலச்சரிவு ஏற்பட்டதாக கேமரன் மலை தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதில் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று டாக்டர் ஸைடி தெரிவித்தார்.