கோலாலம்பூர்: அண்மையில் தமிழ்நாட்டின் தந்தி தொலைக்காட்சிக்கு மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது பேட்டி அளித்தார்.
மலேசிய இந்தியர்களுக்கு மலேசியா மீது முழுமையான விசுவாசம் இல்லை என்று பேட்டியின்போது டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஒருவர் எந்த ஓர் இனத்தையும் தூற்றுவது முறையல்ல என்றும் அது மிகவும் பொறுப்பற்ற செயல் என்றும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
டாக்டர் மகாதீர் இத்தகைய பாரபட்சமிக்க கருத்தைத் தெரிவித்திருப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை என்றும் அவர் அனைத்து இனத்தவர்களையும் நியாயமான முறையில், ஒரே மாதிரியாக நடத்துபவர் அல்ல என்றும் திரு அன்வார் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர்களுக்கு எதிராக டாக்டர் மகாதீர் தெரிவித்த கருத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
“மகாதீரைப் பொறுத்தவரை அவரைத் தவிர மற்ற மலாய்க்காரர்கள் அனைவரும் சோம்பேறிகள். அதேபோல அவருக்கு நெருக்கமான சில சீன நண்பர்களைத் தவிர, ஏனைய மலேசிய சீனர்கள் மலேசியா மீது விசுவாசம் இல்லாதவர்கள் என்பது அவரது எண்ணம்.
“இத்தகைய கருத்துகளை நான் அடியோடு எதிர்க்கிறேன். நாட்டின் மீது விசுவாசம் கொண்ட அனைத்து இனத்தவர்களும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும். நாட்டு மக்களை இன ரீதியாகப் பிரித்துப் பார்க்கக்கூடாது,” என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.