ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) அதிகாலை வெடித்ததில் கிரிண்டாவிக் எனும் நகரம் எரிமலைக் குழம்பால் பாதிக்கப்பட்டது.
அந்த மீன்பிடி நகரத்தின் குடியிருப்பாளர்கள் அனைவருமே அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சென்ற மாதமும் இந்த எரிமலை வெடித்ததை அடுத்து மலையைச் சுற்றித் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. சீறிவந்த எரிமலைக் குழம்பை அந்தத் தடுப்புகளால் முழுமையாகத் தடுத்து நிறுத்த இயலவில்லை.
எரிமலைக் குழம்பு பெருகிவந்ததால் அந்த நகருக்குச் செல்லும் முக்கியப் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. எரிமலைக் குழம்பால் நகரின் வீடுகளும் கட்டடங்களும் தீப்பிடித்ததாகக் கூறப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றிய தொலைக்காட்சி உரையில் ஐஸ்லாந்து அதிபர் குட்னி ஜோகன்சன், ஒன்றுபடவும் வீடுகளைவிட்டு வெளியேறித் தவிப்போருக்குப் பரிவு காட்டும்படியும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.