பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இந்த வாரம் PM2.5 காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்தபடி உள்ளது.
இதைத் தொடர்ந்து, காற்று மாசை எதிர்கொள்ள அந்நகரவாசிகள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்கிறார்கள் என்று தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தன.
இந்நிலை ஜனவரி 17ஆம் தேதி வரை மோசமடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை (பிசிடி), காற்று மாசுபாட்டின் மோசமான நிலையைத் தவிர்க்க வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் தூசி இல்லாத வகுப்பறைகளை அமைக்குமாறு பேங்காக் பெருநகர நிர்வாகம் பள்ளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது என்று பேங்காக் போஸ்ட் செய்தி தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் நகருக்குள் உள்ள அனைத்து மாசு மூலங்களையும் ஆய்வு செய்து வருகிறது.
இந்த மாசுபாடுகள் சுவாசிக்கக் கூடிய துகள்களாகும். பொதுவாக 2.5 மைக்ரோ மீட்டர் அல்லது அதற்கும் குறைவான அளவில் அவை இருக்கலாம்.
மூடுபனியின்போது 2.5 மைக்ரோ மீட்டர் அல்லது அதற்கும் சிறிய அளவிலான துகள்கள் அதிகம் காற்றில் இருக்கும். அவை, நுரையீரல் புற்றுநோய், இதய நோய் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.