ஜோகூர் பாரு: போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது பற்றி ஜோகூர் பாரு நகர மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் வெளிநாட்டினரும் அது குறித்து எரிச்சலடைந்து உள்ளனர்.
அண்மையில் சாலையில் பல மணி நேரம் காத்திருக்க நேர்ந்ததாகக் கூறினார் சிங்கப்பூர் வர்த்தகரான எட்வர்ட் டான், 56.
ஜாலான் வோங் ஆ ஃபூக்கில் உள்ள கடைத்தொகுதி ஒன்றிலிருந்து புறப்பட்டுச் சென்றவோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
“2022 ஏப்ரலில் சிங்கப்பூர்-மலேசிய எல்லை மீண்டும் திறக்கப்பட்ட பிறகு ஜோகூருக்கு மட்டும் ஐந்து முறை சென்றுள்ளேன். ஓராண்டுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் போக்குவரத்து நிலைமை கணிசமாக மாறியிருப்பதைக் காணமுடிகிறது.
“நகரில் காரை நிறுத்துவதற்கு இடம் கிடைப்பதே அரிதாக உள்ளது. விடுமுறை காலத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.
“ஏற்கெனவே உள்ள நெருக்கடியை தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் இன்னும் மோசமாக்கிவிட்டன,” என்றார் திரு டான்.
மற்றொரு சிங்கப்பூரரான ஸஹிதா ஸுல்கிஃப்லி, 30, கூறுகையில், “போக்குவரத்து நெரிசல் எப்படியிருந்தாலும் நான் ஜோகூர் பாருவில் நேரத்தைக் கழிப்பதை அது தடுக்கவில்லை,” என்றார்.
வாரயிறுதியில் தமது நண்பருடன் அவர் ஜோகூர் சென்றார்.
“காரில் செல்லாததால் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு நான் சிரமத்தைச் சந்தித்ததில்லை,” என்றும் திருவாட்டி ஸஹிதா கூறினார்.
பிலிப்பீன்ஸ் நாட்டவரான பேட்டர்னோ சும்பிலோன், 31, கூறுகையில், “அண்மையில் பயணம் மேற்கொண்டபோது ஜோகூர் கடற்பாலத்தில் நெரிசலைச் சந்திக்காவிட்டாலும் ஜோகூர் பாருவில் மோசமான போக்குவரத்து நெரிசல் இருந்தது,” என்றார்.
இதற்கிடையே, கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் ஜோகூர் பாருவில் போக்குவரத்து வழக்கநிலைக்கு மாறும் என்று எதிர்பார்ப்பதாக ஜோகூர் சுற்றுப்பயண வழிகாட்டிகள் சங்கத் தலைவர் ஜிம்மி லியோங் கூறினார்.