தோக்கியோ: வட்டாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
பாதுகாப்பு மோசமடைந்து வரும் சூழலைக் கருத்தில் கொண்டு தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை நேரடியாக ஏற்றுமதி செய்வது ஜப்பானின் எண்ணம்.
டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற உச்சநிலைக்கூட்டத்தில் கலந்துகொண்ட தென்கிழக்கு ஆசியத் தலைவர்கள் உள்ளிட்டோர் சட்ட, ஒழுங்கைப் பாதுகாக்க இன்னும் அதிகம் செய்யுமாறு ஜப்பானிடம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த யோசனை ஜப்பானுக்குப் பிறந்துள்ளது.
ஜப்பான்-ஆசியான் 50ஆண்டு உறவைக் கொண்டாட அந்த உச்சநிலைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதிகாரத்துவ பாதுகாப்பு உதவி என்னும் கட்டமைப்பின் வழியாகவோ நேரடியாகவோ ஆயுதங்களை அனுப்பி வைக்க ஜப்பான் பரிசீலித்து வருவதாக ஜப்பானின் தேசியப் பாதுகாப்புக் கொள்கை விவாதத்தில் பங்கேற்ற அந்நாட்டு அதிகாரி ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.
பிரிட்டன் மற்றும் இத்தாலியுடன் இணைந்து உருவாக்கிய அடுத்த தலைமுறை போர் விமானத்தை ஆசியானில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் இன்னும் பல நாடுகளுக்கு விற்க ஜப்பான் கருதுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
அதிகாரத்துவ பாதுகாப்பு உதவிக் கட்டமைப்பின்கீழ் பிலிப்பீன்ஸ், பங்ளாதேஷ், மலேசியா, ஃபிஜி போன்ற நாடுகளுக்கு ராணுவ சாதனங்களை ஜப்பான் தானமாக வழங்கி வருகிறது.
இதர நாடுகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை விற்பனை செய்வது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை 2024 பிப்ரவரியில் ஜப்பான் வரைய இருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.