ஜக்கர்த்தா: இந்தோனீசியாவில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதை அந்நாட்டு சுகாதார நிலைய அதிகாரி அனி ரஸ்பிடாவாட்டி வியாழக்கிழமை அன்று உறுதிசெய்தார்.
இருப்பினும் மூத்தோருக்கும் எளிதாக பாதிக்கப்படும் நபர்களுக்கு மட்டும் கொவிட் தடுப்பூசிகள் இலவசம் என்று அவர் கூறினார்.
இதனால் தற்போது இலவசமாக வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகளை பொதுமக்கள் உடனடியாக போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜனவரி 1 முதல் அனைத்து விதமான கொவிட்-19 தடுப்பூசிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி கட்டணம் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
மேலும் கொவிட்-19 தடுப்பூசி மற்ற தடுப்பூசி வகைகள் போல் எல்லா சுகாதார நிலையங்களிலும் கிடைக்குமா என்பது பற்றிய விவரங்களும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து அனைத்துவிதமான விவரங்களும் தகவல்களும் இந்தோனீசிய சுகாதார அமைச்சு விரைவில் வெளியிடும் என்று ரஸ்பிடாவாட்டி கூறினார்.
இந்தோனீசியாவில் தற்போது கொவிட்-19 நோய்த்தொற்று வேகமாக பரவிவருகிறது. விடுமுறை காலம் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.