நியூயார்க்: காஸாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க ஐநா பாதுகாப்பு மன்றம் அழைப்பு விடுத்திருக்கும் வேளையில், இஸ்ரேல் ராணுவத் தாக்குதலை நடத்தும் விதம் உதவிப் பொருள்களை விநியோகிக்க பெரும் தடையாக உள்ளது என்று ஐநா தலைவர் தெரிவித்து உள்ளார்.
போர்நிறுத்தத் தீர்மானத்தை ரத்து அதிகாரம் மூலம் தடுக்க அமெரிக்கா முயல்வதைத் தவிர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஐநா பாதுகாப்பு மன்றம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.
காஸாவில் தடையற்ற, பாதுகாப்பான, விரிவான மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகரிக்க அந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. மேலும், உதவிப்பொருள் விநியோகத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸ் குழுவும் அனுதிக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டு உள்ளது.
இதற்கு முன்னர் கொண்டுவரப்பட்ட வரைவு தீர்மானங்களைக் காட்டிலும் நிபந்தனைகள் குறைவாக இருப்பதால் இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய சண்டையில் இஸ்ரேலின் தற்காப்பு உரிமைகளைக் காக்க அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், பிணைக் கைதிகளை விடுவிப்பதன் மீது பாதுகாப்பு மன்றம் அதிகம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்று ஐநாவுக்கான இஸ்ரேலியத் தூதர் ஜிலாட் எர்டான் தெரிவித்து உள்ளார்.
“அவ்வாறு செய்வதற்குப் பதில் உதவிகள் பற்றியே மன்றம் அதிகம் கவனிக்கிறது. அது தேவையற்றது. காரணம், மனிதாபிமான உதவிப் பொருள்களை தேவையான அளவுக்கு விநியோகிக்க இஸ்ரேல் அனுமதித்து வருகிறது,” என்றார் அவர்.
இதற்கிடையே, ஹமாஸ் போராளிக் குழுவுக்கும் மேற்குக் கரையைத் தளமாகக் கொண்ட பாலஸ்தீன நிர்வாக அமைப்புக்கும் இடையில் உதவிப்பொருள் விநியோகம் தொடர்பாக விரிசல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்து உள்ளது.
வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தை பாலஸ்தீன வெளியுறவு அமைச்சு வரவேற்று உள்ளது.