புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் நகரங்களை இணைக்கும் ஆர்ஆர்டிஎஸ் எனப்படும் வட்டார விரைவு போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் முதற்கட்டமாக துஹாய் முதல் சாஹியாபாத் இடையேயான 17 கி.மீ தூர ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.
நாட்டின் ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில், இந்தியா பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளை விரைவாக இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவை இயக்கப்படுகிறது. இது 130 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடிய அதிவேக மெட்ரோ ரெயில் சேவையான ஆர்ஆர்டிஎஸ் என்னும் ரயில் சேவை. இதற்கு ‘நமோ பாரத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அதிவேக மெட்ரோ ரயிலில் மொத்தம் 6 குளிர்சாதன வசதிகொண்ட நவீன பெட்டிகள் உள்ளன. அதில் ஒரு சொகுசு வசதி கொண்ட முதல் வகுப்புப் பெட்டியும், ஒரு பெண்கள் பெட்டியும், நான்கு சாதாரண பெட்டிகளும் இருக்கும். இருபுறமும் தலா இரண்டு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலின் ஒரு பெட்டியில் 72 பயணிகள் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.