கோலாலம்பூர்: வெளிநாட்டு ஊழியர்கள் அளிக்கும் புகார்களையும் அவர்கள் மீதான துன்புறுத்தல் வழக்குகளையும் கையாள மனிதவளத் துறையின்கீழ் ஒரு தனிப்பிரிவை அமைப்பது குறித்து மலேசிய மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
“வெளிநாட்டு ஊழியர்களின் புகார்களையும் துன்புறுத்தல் வழக்குகளையும் கையாள்வது எளிதல்ல என்பதை அறிந்துள்ளோம். சட்டபூர்வமானது என்றாலும்கூட, உள்ளூர்த் தொழிலாளர்களைப் போல் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் உரிமை புலம்பெயர் ஊழியர்களுக்குக் கிடைக்காமல் போகலாம்,” என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமையன்று (மே 9) சொன்னார்,
துன்புறுத்தல் தொடர்பாகப் புகார் அளிப்பதில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து அரசு சாரா நிறுவனங்கள் எடுத்துரைத்ததை அடுத்து, அதற்கென தனிப்பிரிவு அமைக்கும் யோசனை எழுந்ததாகத் திரு சிம் குறிப்பிட்டார்.
மனிதவளத் துறையின்கீழ் அப்பிரிவை அமைக்க தாம் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களின் புகார்களைக் கையாளும் தனிப்பிரிவில் உரைபெயர்ப்பாளர் ஒருவர் இடம்பெறலாம். அத்துடன், புகார் அளிக்கும் ஊழியர்களுக்குத் தற்காலிகத் தங்குமிட வசதியும் வழங்கப்படலாம் என்று ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது.
“உள்ளூர்த் தொழிலாளர் ஒருவர் புகாரளித்தால் அவர் திரும்பச் செல்ல வீடு உள்ளது. ஆனால், வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவ்வசதி இல்லை. அவர்களால் தங்கள் விடுதிக்கும் செல்ல முடியாமல் போகலாம்,” என்றார் திரு சிம்.