வேலையிடத்தில் ஏற்பட்ட காயத்தால் நிரந்தர பாதிப்படைந்த ஊழியர்கள் விடுத்த இழப்பீட்டுக் கோரிக்கைகளில் ஏற்கப்பட்டவற்றின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டைவிட 2023ஆம் ஆண்டில் ஏறத்தாழ 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.
நிரந்தர பாதிப்பு ஏற்பட்ட ஊழியர்கள் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் 5,173 இழப்பீட்டுக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 3,992ஆக இருந்தது.
ஊழியர்கள் மருத்துவச் சான்றிதழ் விடுப்பில் இருந்தபோது அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், அவர்களுக்குத் தரப்பட்ட இழப்பீடு என 2023ஆம் ஆண்டில் ஏறத்தாழ $112 மில்லியன் வழங்கப்பட்டதாக மனிதவள அமைச்சு 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்ட வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் வேலையிடத்தில் காயமடைந்த ஊழியர்களுக்கு (நிரந்தர பாதிப்பு உட்பட) வழங்கப்பட்ட இழப்பீடு 2022ஆம் ஆண்டுடன் 6 விழுக்காடு அதிகம் (25,566லிருந்து 29,688ஆக அதிகரிப்பு).
காயமடைந்து இழப்பீடு கோரும் ஊழியர்களில் சிலரை உள்ளூர் அறநிறுவனமான ‘டிரான்சியன்ட் வொர்க்கர்ஸ் கவுன்ட் டூ’ அமைப்பின் தலைவர் திருவாட்டி டெபி ஃபோர்டைஸ் அன்றாடம் மாலை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பு அறநிறுவனத்துக்குச் சொந்தமான ரோவேல் சாலை கடைவீட்டில் நடைபெறுகிறது.
வேலையிடத்தில் படுகாயம் ஏற்பட்டு வேலை செய்ய முடியாமல் தங்கள் சம்பளத்துக்காகவும் அல்லது இழப்பீட்டுத் தொகைக்காகவும் காத்துக்கொண்டிருக்கும் கிட்டத்தட்ட 80 ஊழியர்கள், இலவச உணவுக்காக அறநிறுவனத்துக்குச் சொந்தமான கடைவீட்டிற்குச் செல்கின்றனர்.
இவர்களில் கை அல்லது கால் இழந்தவர்கள், முதுகுத் தண்டில் படுகாயம் அடைந்தவர்கள் என நிரந்தர பாதிப்பு ஏற்பட்டவர்களும் அடங்குவர்.
பொதுவாகவே, இந்த ஊழியர்கள் இழப்பீட்டுத் தொகைக்காக கிட்டத்தட்ட ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்றார் திருவாட்டி ஃபோர்டைஸ்.
அவர்களது விண்ணப்பத்துக்கு முதலாளிகள் எதிர்ப்பு தெரிவித்தால் தீர்வு காண இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் ஆகலாம் என்றார் அவர்.
அக்காலகட்டத்தில் வேலை செய்ய சில ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
அவர்களது வேலை அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படுவதால் அவர்களுக்கு இந்நிலை ஏற்படுகிறது.
“சொந்த நாட்டில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு ஊழியர்களால் பணம் அனுப்ப முடியாத நிலை ஏற்படும்போது அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். தங்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை தங்கள் குடும்பத்தாருக்குத் தெரியக்கூடாது என்று பாதிக்கப்பட்ட ஊழியர்களின் பலர் விரும்புகின்றனர்,” என்று திருவாட்டி ஃபோர்டைஸ் தெரிவித்தார்.