கோலாலம்பூர்: எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்த அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இது, நிலைத்தன்மைமிக்க, அதிக வருமானம் கொண்ட, பாதுகாப்பான சூழலுடன் கூடிய நாடாக மலேசியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் அன்வார் இப்ராகிமின் தொலைநோக்குடன் ஒத்துப்போவதாகத் திரு சைஃபுதீன் குறிப்பிட்டார்.
“நாட்டின் ஒற்றுமையையும் நிலைத்தன்மையையும் பாதுகாக்க, இணையத் தாக்குதல்கள், சுயதீவிரவாதப் போக்கு, தீவிரவாதம் போன்ற அச்சுறுத்தல்களைத் திறம்பட எதிர்கொள்வது அவசியம்,” என்றார் அவர்.
தற்காப்பு அமைச்சர் காலித் நூர்தினுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5) செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
எல்லையில் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மலேசியச் சோதனைச்சாவடிகள், எல்லை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக (எம்சிபிஏ) திரு சைஃபுதீன் குறிப்பிட்டார்.
இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு எம்சிபிஏ வசம் ஒப்படைக்கப்படுவதாகக் கடந்த வியாழக்கிழமையன்று பிரதமர் அன்வார் அறிவித்திருந்தார்.