டாக்கா: பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா அந்நாட்டின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஐந்தாம் தவணைக்குப் பொறுப்பேற்கிறார்.
முக்கிய எதிர்த்தரப்புக் கட்சி, பொதுத்தேர்தலைப் புறக்கணித்ததாகவும் திருவாட்டி ஹசினாவின் கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றதாகவும் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் கூறியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் திருவாட்டி ஹசினாவின் அவாமி லீக் கட்சி கிட்டத்தட்ட முக்கால்வாசி இடங்களைக் கைப்பற்றியதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதவி விலகுவதற்கும், தேர்தலை நடுநிலையான ஆணையம் ஒன்று நடத்துவதற்கும் முக்கிய எதிர்த்தரப்புக் கட்சியான பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி முன்வைத்த கோரிக்கைகளை திருவாட்டி ஹசினா நிராகரித்ததைத் தொடர்ந்து, அக்கட்சி தேர்தலைப் புறக்கணித்தது.
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி இரண்டு நாள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. தேர்தலைப் புறக்கணிக்குமாறு அது மக்களைக் கேட்டுக்கொண்டது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து டாக்காவை உலுக்கியிருக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்த்தரப்பு தூண்டியதாக திருவாட்டி ஹசினா குற்றஞ்சாட்டினார். அந்த ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பொதுத் தேர்தலிலிருந்து பல பங்ளாதேஷ் மக்கள் தள்ளியே இருந்தனர். வாக்களிப்பு முடிவடைந்தபோது ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்திருந்ததாக தலைமைத் தேர்தல் ஆணையர் காஸி ஹபிபுல் அவால் கூறினார்.
ஒப்புநோக்க 2018ஆம் ஆண்டின் தேர்தலில் அந்த விகிதம் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்தது.