மலேசியாவின் பேராக் மாநிலத்தில் காட்டு யானைகள் பள்ளிக்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளன. மாநிலத் தலைநகர் ஈப்போவிலிருந்து 70 கிமீ தொலைவிலுள்ள அந்த தோட்டப் பள்ளியில் ஜூன் 8ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வகுப்பறைகளின் சன்னல்கள், கம்பிகள், சமையலறை ஆகியவற்றை சேதப்படுத்தியதுடன் பூந்தொட்டிகள், வாழை, தென்னை மரங்களையும் அவை அழித்துள்ளன.
ஆறு யானைகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததாக மாநிலத்தின் வனவிலங்கு, தீபகற்ப மலேசியாவின் தேசிய பூங்கா இயக்குனர் யூசோஃப் ஷெரீப்பை மேற்கோள்காட்டி மலாய் நாளிதழ், சினார் ஹரியான் செய்தி வெளியிட்டது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. யானைகள் மீண்டும் காட்டுக்குள் விரட்டப்பட்டன. அவை உணவுதேடி வெளியே வந்திருக்கலாம் என்று திரு யூசோஃப் கூறினார்.
இந்த சம்பவத்தை கோலா கங்சார் உதவி மாவட்ட கல்வி அதிகாரி ரஸ்ஸிடி ரசிட் தனது ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு பள்ளி சம்பந்தப்பட்ட இதுபோன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடந்துள்ளது என்றார் அவர்.