தமிழ்நாட்டில் அண்மையில் சச்சரவை ஏற்படுத்திய ‘12 மணி நேர வேலை’ எனும் சட்ட மசோதாவை திரும்பப் பெற்றுக்கொண்டதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் இருக்கும் நினைவுச்சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து நேற்று மரியாதை செலுத்தினார் அவர்.
பின்னர் உரையாற்றிய அவர், “12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது பற்றி எம்.எல்.ஏக்களுக்கு செய்திக் குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்படும்.
“அந்த மசோதாவை நிறுத்திவைத்த பின்னரும் சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டின் வட, தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் பெரும் முதலீடுகளை ஈர்க்கவும் 12 மணி நேர வேலை மசோதா கொண்டுவரப்பட்டது,” என விளக்கமளித்தார்.
மசோதாவை விட்டுக்கொடுப்பதை தாம் அவமானமாக நினைக்கவில்லை என்றும் திரு ஸ்டாலின் குறிப்பிட்டார்.
“இதை விட்டுக்கொடுப்பதை நான் அவமானமாக கருதவில்லை. மாறாக, இதைப் பெருமையாகவே கருதுகிறேன். மசோதாவைக் கொண்டுவருவதில் துணிச்சல் என்றால், அதைத் திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான்.
“திமுக அரசு கொண்டுவந்த 12 மணி நேர வேலை மசோதாவை திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தொழிற்சங்கமே எதிர்த்ததை நான் பாராட்டுகிறேன்.
“திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு,” என்றும் திரு ஸ்டாலின் கூறினார்.
அந்த மசோதாவை அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்ததுடன், மே தினத்தில் அதனைத் திரும்பப் பெறுவதாக திரு ஸ்டாலின் அறிவித்துள்ளதை தாங்கள் வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.
“எட்டு மணி நேர வேலையை மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வரின் இந்த நிலைபாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது,” என்றார் திரு திருமாவளவன்.
“மசோதாவை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி பலரும் வலியுறுத்தி வந்துள்ளனர். அதனை இன்று முதலமைச்சர் ஏற்று, மே தினக் கொண்டாட்டத்தில் அனைத்துத் தொழிலாளருக்கும் முழு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சட்ட வரைவைத் திரும்பப் பெற்றதாக அறிவித்திருப்பதற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் திரு வீரமணி.