பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் நேற்றுக் காலை வாயு கசிந்ததால் 11 பேர் உயிரிழந்தனர். அவர்களுள் இரண்டு சிறுவர்களும் அடங்குவர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பால் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் அமைந்துள்ள குளிரூட்டு இயந்திரத்தில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டதாகவும் தொழிற்சாலை முழுவதும் பரவியதாகவும் நம்பப்படுகிறது.
இதனால் வேலையில் இருந்த ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதுடன் ஒருசிலர் மயங்கிக் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படையும் தீயணைப்புப் படையும் தொழிற்சாலை வளாகத்திற்கு பாதுகாப்பு முகக்கவசம் அணிந்துகொண்டு விரைந்து தொழிற்சாலைக்குள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன.
வாயுக்கசிவால் உயிரிழந்தவர்கள் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் குறைந்தது 11 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் நம்பப்படுகிறது.
இதையடுத்து, தொழிற்சாலையில் இருந்து கசிந்த வாயு, கிட்டத்தட்ட 300 மீட்டர் சுற்றளவுக்குப் பரவியதாகவும் அப்பகுதி மக்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு பகுதியில் இந்த வாயுக்கசிவு சம்பவம் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
வாயு எந்த வகையைச் சேர்ந்தது என்பது தொடர்பான விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.